அண்டரண்டப் பறவை

கண்டரண்ட பக்ஷி - இது ஒரு பேருருக் கொண்ட பக்ஷியெனக் கதைகளில் கூறியிருக்கின்றனர். நம்ப இடமில்லை.

- அபிதான சிந்தாமணி

அண்டரண்டப் பட்சி; நெடுங்குணம் யோக ராமர் கோயில்

  • தமிழில் அண்டரண்டப் பறவை. கன்னடத்தில் கண்டபேருண்டப் பறவை. 
  • இது ஒரு கற்பனையான புராணப் பறவை. 
  • மேற்கண்ட படத்தில் மனித உருவமும் இரண்டு கழுகுத் தலைகளும் இரு இறக்கைகளும் கொண்டுள்ளது. 
திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில்.

பல யானைகளை அடக்கித் தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமை உடையதாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சோமேசுவரர் கோயில் நந்தி மண்டபத் தூண் சிற்பம்
மனித உருவம், இரண்டு கழுகுத் தலைகள், இரு இறக்கைகள்
இரு கால்களின் கீழ் இரு யானைகள், இரு கைகளில் இரு யானைகள், இரு அலகுகளில் இரு யானைகள் என ஆறு யானைகளை வெல்லும் ஆற்றலையும் பேருருவத்தையும் சித்தரிக்கும் சிற்பம்.

ராமேசுவரர் கோயில், கேளடி, சிவமொக்கா மாவட்டம், கர்நாடகா
(படம் நன்றி: Dineshkannambadi at the English-language Wikipedia, CC BY-SA 3.0 <http://creativecommons.org/licenses/by-sa/3.0/>, via Wikimedia Commons)

கேளடி, கேளடி நாயக்கர்களின் தலைநகரமாக இருந்த ஊர். மேல் படத்தில் மனித உருவம் இல்லை. முற்றிலும் பறவை உடல். இரு தலைக் கழுகு உருவம். தன் கால்களால் இரு யானைகளையும், தன் இரு அலகுகளால் இரு சிங்கங்களையும் கவ்விப் பறக்கும் பெரும் பறவை. இரு சிங்கங்களும் இரு யானைகளைப் பிடித்துள்ளன.

அண்டரண்டப் பறவை மைசூர் அரசர்களின் அரச சின்னமாக இருந்து, பின்னர் கர்நாடக மாநிலம் உருவானபோது அதன் சின்னத்தில் இடம் பெற்றுள்ளது.

கர்நாடக மாநில அரசுச் சின்னம்
(படம் நன்றி: By Government of Karnataka - File:Emblem of India.svg, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=8355417)

அண்டரண்டப் பறவை.
ஒதிஷா ஓவியம் (1650-1700)
படம் நன்றி: Los Angeles County Museum of Art, Public domain, via Wikimedia Commons

தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி மண்டப கூரை ஓவியம்.
தஞ்சாவூர் நாயக்கர் காலம்
(படம் நன்றி: Balaji Srinivasan, CC BY-SA 2.0 <https://creativecommons.org/licenses/by-sa/2.0>, via Wikimedia Commons)

இந்து கோயிலில் மிகப் பழமையான அண்டரண்டப் பறவை சிற்பம் (11 ஆம் நூற்றாண்டு) ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பெலிகாவி கிராமத்தில் இருந்தது. ஒரு சாளுக்கியப் படைத்தலைவன் நிர்மாணித்த வெற்றித் தூண் மீது இருந்த அந்த சிலை உடைந்துவிட்டது. அதே நகலை 1937 இல் ஒரு மைசூரு சிற்பி உருவாக்கினார்.

அண்டபேரண்டப் பறவை, பெலிகாவி

மன்னார்குடி ராஜகோபால சுவாமி 6 ஆம் நாள் உற்சவ வாகனமாக அண்டபேரண்டப் பறவை உள்ளது. 

மன்னார்குடி ராஜகோபால சுவாமி 6 ஆம் நாள் உற்சவ வாகனம்
(படம் நன்றி: 
http://anudinam.org/wp-content/uploads/2014/03/Mannargudi-Rajagopalan-Day-6-Utsavam-2014-12.jpg)

சரபருக்கு வைணவர்களின் எதிர்க்கதையாடல்

இரண்யனை வதம் செய்த நரசிம்மரின் வெறியை பிரகலாதன் தன் பாடல் வழிபாட்டால் குளிர்வித்தான் என்பது ஒரு புராணம்.

சிவனின் மேன்மையை குறிக்கும் மாற்றுக் கதையாடலாக சரவேசுவரர் கதை உருவாகி வந்தது. சரபேசுவரர் சிவனின் 64 வடிவங்களில் ஒன்று. இரண்ய வதத்தின்போது தெரித்த அசுர ரத்தம் தன் மேனியில் பட்டதால் வெறிகுறையாது உலகை அழிக்கத் தொடங்கிய நரசிம்மரை தடுத்து நிறுத்துமாறு தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் சிங்க முகம், மேலே மனிதன் கீழே சிங்கம் ஆன உடல், 8 கால்கள், நான்கு கைகள், 2 இறக்கைகளுடன் சரபம் என்னும் பறவை உரு எடுத்தார். சரபம் நரசிம்மரை அள்ளிக்கொண்டு விண்ணில் மேலே பறந்து அசுர ரத்தத்தை வெளியேற்றியது. நரசிம்மர் தன்னிலை மீண்டார்.

சரபர் நரசிம்மரை தூக்ப் பறந்தவாறு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபம்

அண்டரண்டப் பறவையைக் கொண்டு திருமாலின் மேன்மையை நிறுவும் ஒரு வைணவ எதிர்க் கதையாடலும் உருவானது. 

'சரபர் நரசிம்மரைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது நரசிம்மர் அண்டரண்டப் பறவையாக மாறி சரபரோடு போரிட்டார். 18 நாள் நிகழ்ந்த கடும் போருக்குப் பிறகு சரபர் தோற்றார். தோல்வியின் அடையாளமாக சரபர் தன் தோலை உரித்து நரசிம்மரிடம் தந்தார். இருவரும் தத்தம் தன்னிலை மீண்டனர்.'

இக்கதையை மேலும் வளர்த்து பிரதியங்கரா தேவி வரை நீட்டித்துள்ளது சாக்தம். காண்க:


இலக்கியத்தில் அண்டபேரண்டப் பறவை

பஞ்சதந்திரக் கதை ஒன்றில் 'பாரண்டா'  என்ற பெயருடைய ஒரு இருதலைப் பறவை வருகிறது. 
'பாரண்டா என்ற பறவை ஒரு ஏரிக் கரையில் வசித்து வந்தது. இரு தலை ஒருடல் கொண்ட அதிசயப் பறவை. ஒரு நாள் உணவு தேடி அலைந்தபோது ஒரு தலை ஒரு இதுவரை கண்டிராத பழம் ஒன்றைப் பார்த்தது. அதை எடுத்து உண்ணத் தொடங்கியது. அமிர்தம்  போன்ற சுவை. இரண்டாவது தலையும் அதை சுவைக்க விரும்பியது. முதல் தலை தர மறுத்து விட்டது. ஆத்திரமடைந்த இரண்டாம் தலை பின் ஒரு நாள் ஒரு நச்சுக்கனியை, முதல் தலை சொல்லியும் கேட்காமல் உண்டு விட்டது. தலை இரண்டானாலும் வயிறு ஒன்றே. பாரண்டா மாண்டு போனது.'

சங்கப் பாடல்களில் இருதலைப்புள்:

"..... பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே"
- அகநானூறு 12

"ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்?"
 - கலித்தொகை 89

"கண்ட பேரண்டம் தண்டலை நாடும்"
முக்கூடற் பள்ளு

கூடுதல் தகவல்களுக்குக் காண்க:

தன் அனுபவம், கற்பனை, கலை, வரலாறு, தொன்மம் ஆகியவற்றை எல்லாம் அழகாகப் பின்னிய விரிவான கட்டுரை:


பழம்காலம் முதல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருதலைக் கழுகு வடிவத்தின் இருப்பு குறித்த தகவல்கள் படங்களுக்குக் காண்க:

Double Headed Eagle -விக்கிபீடியா

இந்தியக் கலையில் அண்டரண்டப் பறவை பற்றி படங்களுடன் விரிவான கட்டுரை:

A Unique Motif In Indian Art- Part II: Gandabherunda; INDICA Today









கேளடி


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அருமை ராஜேந்திரன்... திருவண்ணாமலை.. ரிஷப மண்டபத்தின் தூணிலும் உள்ளது.. போசாளர்களின் விரிவாக்கத்தின் போது அம்மண்டபம் கட்டப்பட்டதாகவும் அவர்களுடைய சின்னமாகவும் ( சாலா சிங்கத்துடன் போரிடும் சிற்பம் அவர்களின் சின்னம் ) பார்கப்படுகின்றது . என்னுடைய பதிவிலும் இணைத்து உள்ளேன்...

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்